விழுப்புரம்: கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு – இருவர் பிடிபட்டனர்!
விழுப்புரம் அருகே கடற்கரையில் கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட 4 இளைஞர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டக்குப்பம் கடற்கரைப் பகுதியில் நள்ளிரவில் ஒரு கும்பல் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தட்டிக்கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த போதை கும்பல், தங்களை எதிர்த்த 4 இளைஞர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் காவல் துறையினரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட போலீசார், இச்சம்பவம் தொடர்பாக இருவரைப் பிடித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள கடற்கரை பகுதியில் நடந்த இந்தத் துணிகரத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.







