பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையிலும், இந்தியாவில் எரிபொருள் விலை உயராமல் தடுக்க மத்திய அரசு கலால் வரியை (Excise Duty) அதிரடியாகக் குறைத்துள்ளது. இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், டீசல் மீதான கலால் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
மேற்காசியப் போர்ச் சூழலால் உலகெங்கும் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிசெய்யவும், மக்கள் மீது கூடுதல் சுமை விழாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்காசியப் போருக்குப் பிறகு அமெரிக்காவில் பெட்ரோல் விலை 20 சதவீதமும், பாகிஸ்தானில் லிட்டருக்கு 55 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகக் கம்போடியாவில் 68 சதவீதமும், வியட்நாமில் 50 சதவீதமும் விலை ஏற்றம் கண்டுள்ளது. சுமார் 95 நாடுகளில் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், தென்கொரியா 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வைச் சந்தித்துள்ளது.
இந்த இக்கட்டான உலகளாவிய சூழலிலும், இந்தியாவில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் இன்று வரை பெட்ரோல், டீசல் விலை உயராமல் ஒரே நிலையில் நீடிப்பதை உறுதி செய்துள்ள மத்திய அரசின் இந்தத் துரித நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.










