சென்னை: குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதாகப் புகார் – மறியலில் ஈடுபட்ட மக்களை அடிக்கக் கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!
சென்னை மாத்தூர் பகுதியில் திமுக கவுன்சிலர் ஒருவர் பொதுமக்களைத் தாக்கக் கை ஓங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால், அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்துப் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்துத் தகவலறிந்து அங்கு வந்த திமுக கவுன்சிலர் காசிநாதன், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரசமாகப் பேசுவதற்குப் பதிலாகக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடிக்கக் கை ஓங்கியதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. மக்கள் பிரதிநிதியே பொதுமக்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட இந்தச் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







