பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி பலி: 16 மணி நேரமாக நீடிக்கும் சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!
தென்காசி:
புளியங்குடி அருகே தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 16 மணி நேரத்திற்கும் மேலாகச் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி – வேல்மயில் தம்பதியினரின் 4 வயது மகள், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்தார். நேற்று பள்ளி வளாகத்திற்குள் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகச் சிறுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், விபத்திற்குக் காரணமானவர்களையும், அதற்குத் தொடர்புடையவர்களையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி, சிறுமியின் உறவினர்கள் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 16 மணி நேரத்தைக் கடந்தும் இந்தப் போராட்டம் நீடிப்பதால், அந்த வழியே செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
தற்போது போராட்டக்காரர்களுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என உறவினர்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.









