கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில், தங்களது குலதெய்வ வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து, வரவிருக்கும் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதாகப் பொதுமக்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கிராமம் முழுவதும் பேனர்களை வைத்துள்ள மக்கள், அதிகாரிகளின் மெத்தனப் போக்கிற்குத் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
மேலப்பட்டு கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அங்குள்ள ஸ்ரீமுனியப்ப சுவாமி கோயிலைத் தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோயிலில் திருவிழா மற்றும் வழிபாடுகளை நடத்த அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் எனப் பல மட்டங்களில் மனுக்கள் அளிக்கப்பட்டன. இருப்பினும், இதுவரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாகத் தங்கள் வீட்டுச் சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சின்னங்களை அழித்ததோடு, தங்களது ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைக் கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டால், ஜனநாயகக் கடமையை ஆற்ற மாட்டோம்” என முழக்கமிட்ட அவர்கள், தேர்தல் புறக்கணிப்பு குறித்த பேனர்களை ஊர் எங்கும் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.










