ஆகாஷ் மரண வழக்கு: “உடலை வைத்து அரசியல் செய்வதா?” – மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!
மதுரை:
சிவகங்கை இளைஞர் ஆகாஷ் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, “உயிரிழந்தவரின் உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கதல்ல” என்று கூறி, இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரைக் கைது செய்யக் கோரியும், அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரியும் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கடும் அதிருப்தி வெளியிட்டனர். “இறந்தவரின் உடலைப் பெற வேண்டாம் என்று தடுத்தது யார்?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்றத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தனர். மேலும், “உடல் அங்கேயே அழுகிவிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உடலுக்கு இறுதி மரியாதை செய்யாமல் அரசியல் செய்வது முறையல்ல” என்று காட்டமாகக் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “தற்போது உடலை வைத்துப் போராட்டம் நடத்துவது ஒரு பேஷனாகி விட்டது” என்று வேதனை தெரிவித்தனர். இறந்த நபரின் உடலுக்கு உரிய இறுதி மரியாதை செய்யப்பட வேண்டியது ஒரு அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், விளம்பரத்திற்காகத் தாக்கல் செய்யப்பட்ட இத்தகைய மனுக்களை நீதிமன்றம் ஏற்க இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.










