நிலக்கோட்டை அருகே பரபரப்பு: ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச் சென்ற ரூ.3.44 கோடி பறிமுதல் – ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிரடி!
நிலக்கோட்டை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உரிய ஆவணங்களின்றி ஏடிஎம் மையங்களில் நிரப்ப எடுத்துச் செல்லப்பட்ட 3 கோடியே 44 லட்சம் ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தைக் கைப்பற்றத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காகப் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுப் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அந்த வழியாக வந்த தனியார் பாதுகாப்பு வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வந்த அந்த வாகனத்தில் ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காகப் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இருப்பினும், அந்தப் பணத்திற்குரிய முறையான வங்கி ஆவணங்கள் மற்றும் அனுமதிச் சான்றிதழ்கள் இல்லாததால், அதிகாரிகள் சுமார் 3 கோடியே 44 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட பணம் உடனடியாக நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது வங்கிக்குச் சொந்தமான பணமா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







