ஊடகவியலாளர் மீது திமுகவினர் தாக்குதல்: “அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” – அண்ணாமலை கடும் சாடல்!
சிவகங்கை:
சிவகங்கையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது, ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
நியூஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில், அதன் ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் ராஜேஷ் மீது திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறனின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
“இனி தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பது உறுதியானதால், திமுகவினர் எல்லை மீறிச் செயல்பட்டு வருகின்றனர்” என்று அவர் விமர்சித்துள்ளார். திமுகவில் உள்ள ரவுடிகளால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும் போது, சாதாரணப் பொதுமக்களின் நிலை என்னவாகும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகத் தெருத்தெருவாகச் சென்று ஒவ்வொரு கடையிலும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த நிகழ்வுகளை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும், தமிழக மக்கள் இனியும் திமுகவின் இத்தகைய செயல்களை மன்னிக்கத் தயாராக இல்லை என்றும் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.








