சென்னையில் விஜி்ல் அமைப்பின் பண்ணிசைப் பெருவிழா: தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்க ஆதீனங்கள் அறைகூவல்!
சென்னை:
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டைப் பறைசாற்றும் நோக்கில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ‘விஜில்’ (Vigil) அமைப்பு சார்பில் ‘பண்ணிசைப் பெருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின் முக்கிய ஆதீனங்களான மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், தொண்டைமண்டல ஆதீனம் மற்றும் திண்டுக்கல் ஆதீனம் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியோர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, சிறுவர்கள் சிவபெருமான் வேடமணிந்து மெய்சிலிர்க்கும் வகையில் திருவாசகப் பாடல்களைப் பாடினர். இதனைத் தொடர்ந்து, பண்ணிசைத் தொண்டாற்றி வரும் ஓதுவாமூர்த்திகளுக்கு ஆதீனங்கள் விருது வழங்கி கௌரவித்தனர். விழாவில் பேசிய செங்கோல் ஆதீனம், திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். தொண்டைமண்டல ஆதீனம் பேசுகையில், பக்தி நெறியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது நமது தலையாய கடமை எனக் குறிப்பிட்டார்.
திண்டுக்கல் ஆதீனம் தனது உரையில், திருவாசகமும் ஓதுவாமூர்த்திகளும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்ந்து வருவதாகப் புகழாரம் சூட்டினார். இறுதியாகப் பேசிய மதுரை ஆதீனம், ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுச் சென்றாலும் அவர்களது மொழியும் கலாச்சாரமும் இன்னும் நம்மைத் தொடர்வது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், நாடு சுபிட்சமாக இருக்க வேண்டுமானால் முதியோர் இல்லங்கள் மூடப்பட வேண்டும் என்றும், பெரியோர்களை மதிக்கும் பண்பு வளர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








