திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு
சேலத்தில் தாய் மற்றும் பெண் குழந்தையைக் கடத்திச் சென்று ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகியின் செயலுக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் நிலத்தகராறு காரணமாக, பெண் ஒருவரையும் அவரது மகளையும் திமுக நிர்வாகி செந்தூர் கார்த்தி என்பவர் கடத்திச் சென்று, அவர்களை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “ஆளுங்கட்சி என்ற மமதையில் பெண்கள் மற்றும் குழந்தைகளை இதுபோன்று இழிவாகச் சித்தரித்து மிரட்டியிருப்பது ஒரு வெட்கக்கேடான செயல்” என்று சாடியுள்ளார். இத்தகைய சமூக விரோதிகளால்தான் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக அமைதிக்கும், பெண்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் திமுகவை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் உரிய நீதி கிடைக்கத் தமிழகக் காவல்துறை உடனடியாகத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








