வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: 230 தமிழ் எழுத்தாளர்கள் கடும் எதிர்ப்பு
கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என 230 தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைரமுத்துவுக்கு இந்த உயரிய விருதை வழங்குவது தமிழ் இலக்கிய மரபுக்கும், அந்த விருதின் கண்ணியத்திற்கும் இழைக்கப்படும் பெரும் அவமதிப்பு என்று சுட்டிக்காட்டியுள்ளனர். வைரமுத்துவின் எழுத்துகளில் தமிழ் சமூகத்தின் ஆழமான விழுமியங்களோ அல்லது கலாச்சாரப் பெருமிதங்களோ பதிவாகவில்லை என்றும், வெறும் அடுக்குமொழிச் சொற்களால் அலங்கரிக்கப்பட்ட வணிகமயமான எழுத்துகளே அவரது அடையாளம் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும், வைரமுத்து மீது பல்வேறு பெண்கள் முன்வைத்துள்ள ‘மீ டூ’ (Me Too) புகார்களைச் சுட்டிக்காட்டியுள்ள எழுத்தாளர்கள், அவரது படைப்புகள் மற்றும் பேச்சுகளில் ஆணாதிக்கப் பார்வையை வெளிப்படுத்துபவர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். தகுதியற்ற ஒருவருக்கு இத்தகைய விருது செல்வது எதிர்காலத்தில் அந்த விருதின் நம்பகத்தன்மையையும் பெருமையையும் அழித்துவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே, படைப்பாளர்கள் சங்கம் அமைப்பும் இந்த விருது அறிவிப்பிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாரதீய ஞானபீட அமைப்பின் தலைவருக்கு அந்த அமைப்பின் நிர்வாகிகள் எழுதியுள்ள கடிதத்தில், இந்த விருது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.






