மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தென்காசி இளைஞர் மீட்பு: அதிமுக எம்.எல்.ஏ நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு!
தென்காசி:
ஆப்பிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, மத்திய அரசின் தீவிர முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்ட தென்காசியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை, அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சம்பவத்தின் பின்னணி:
தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் பிழைப்புக்காக மாலி நாட்டிற்கு வேலைக்குச் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் அந்நாட்டுத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். இந்தத் துயரமான சூழலில், கடத்தப்பட்டவர்களில் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கையை ஏற்று இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்தியத் தூதரகம் மேற்கொண்ட தொடர் ராஜதந்திர முயற்சிகளின் பலனாக, எஞ்சிய 4 பேரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.
எம்.எல்.ஏ சந்திப்பு:
மத்திய அரசின் துரித நடவடிக்கையால் சொந்த ஊர் திரும்பிய தென்காசியைச் சேர்ந்த சுரேஷை, அவரது இல்லத்தில் சந்தித்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி, அவருக்குச் shawl அணிவித்து நலம் விசாரித்தார். மேலும், அங்கிருந்த சுரேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், இக்கட்டான சூழலில் உதவி செய்த மத்திய அரசிற்கும், அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். பல மாத காலப் போராட்டத்திற்குப் பிறகு சுரேஷ் வீடு திரும்பியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.