அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி: காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு!
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த இருவர், கஞ்சா போதையில் ஒரு இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தகராறின் பின்னணி:
பழஞ்சநல்லூரைச் சேர்ந்த திலீப்குமார் மற்றும் அபினேஷ் ஆகிய இருவரின் மனைவிகளும் மகப்பேறு சிகிச்சைக்காகக் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருவருக்கும் குழந்தை பிறந்த நிலையில், தனது குழந்தையைப் பார்க்க அபினேஷ் போதையில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அவர் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்தார்.
கொலை முயற்சி:
அபினேஷின் ரகளையைக் கண்ட திலீப்குமார், அவரைத் தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ், உடனடியாகத் தனது நண்பரை ஆயுதங்களுடன் வரவழைத்து திலீப்குமாரைத் தாக்கினார். பட்டாகத்தியுடன் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயன்றதைக் கண்டு அங்கிருந்த நோயாளிகளும் பொதுமக்களும் அலறியடித்து ஓடினர்.
துரித நடவடிக்கை:
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த திலீப்குமாரை அங்கிருந்த பொதுமக்கள் சாதுர்யமாக ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டிப் பாதுகாத்தனர். இதுகுறித்துத் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆயுதங்களுடன் மிரட்டிய அபினேஷ் மற்றும் அவரது நண்பரைத் தப்பியோட விடாமல் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.