கிருஷ்ணகிரியில் அதிமுக எம்.பி தம்பிதுரை ஊர்வலம்: தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி!
கிருஷ்ணகிரி:
அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிதுரை, இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதிக்கு நேரில் வருகை தந்து தனது தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை மரியாதை:
பர்கூர் பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் உற்சாகமாக ஊர்வலமாக வந்த அவர், அங்கிருந்த மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார்.
துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம்:
மக்களிடையே பேசிய தம்பிதுரை, தான் தொடர்ந்து எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். உரையின் ஒரு பகுதியாகத் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், “துணை முதலமைச்சர் என்பது ஒரு சாதாரண பதவி தான்; ஆனால் அந்தப் பதவிக்காகக் காவல்துறையினர் மிக அதிகப்படியான மரியாதையைக் கொடுத்து வருகின்றனர்” என்று காரசாரமாக விமர்சித்தார்.