இந்தியாவின் ராஜதந்திர வெற்றி: ஈரான் கடற்பகுதியைக் கடந்து இந்தியா வரும் 2 எரிவாயு கப்பல்கள்!
புதுடெல்லி:
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவின் இரண்டு எல்.பி.ஜி (LPG) கப்பல்கள் எவ்வித தடையுமின்றி இந்தியா நோக்கிப் புறப்பட்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலால் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அரசின் துரிதமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குக் கிடைத்துள்ள வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
ஈரான் தூதரின் உறுதிமொழி:
இந்த இக்கட்டான சூழலில் இந்திய அரசு ஈரான் தரப்புடன் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தியக் கப்பல்கள் எப்போதும் ஈரானின் நட்பு நாடுகளின் கப்பல்களாகவே கருதப்படுவதாகவும், சர்வதேச கடல் எல்லையில் அவை பாதுகாப்பாகப் பயணிக்க முழு உரிமை உண்டு என்றும் அவர் உறுதி அளித்தார்.
பாதுகாப்பான பயணம்:
இதனையடுத்து, ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய இரண்டு எல்.பி.ஜி டேங்கர் கப்பல்கள் தற்போது ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்தப் பாதையைக் கடக்க முயன்ற பிற நாட்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டிருப்பது பிரதமர் மோடி தலைமையிலான வெளியுறவுத்துறையின் வலிமையான உறவை உறுதிப்படுத்துகிறது.