பொருளாதார சவால்களை எதிர்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதி: மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி!
புதுடெல்லி:
உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு முழுத் தயார் நிலையில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று ஆற்றிய உரையில், சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் போர்ச் சூழல்கள் இந்தியாவைப் பாதிக்காத வண்ணம் தற்காப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை நிதி:
உலகளாவிய பொருளாதார மற்றும் போர் நெருக்கடிகளைத் திறம்படச் சமாளிப்பதற்காக, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பிரத்யேக ‘பொருளாதார ஸ்திரத்தன்மை நிதி’ (Economic Stability Fund) ஒதுக்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்தார். இந்த நிதியானது நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், சர்வதேச சந்தை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும் என்று விளக்கமளித்தார்.
எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு:
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் சார்ந்த இக்கட்டான சூழலில், எதிர்க்கட்சிகள் அரசுடன் இணைந்து நின்று ஒத்துழைப்பு வழங்காமல், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக நிர்மலா சீதாராமன் கடும் குற்றம் சாட்டினார். இத்தகைய சவாலான நேரத்திலும் மத்திய அரசு நாட்டின் வளர்ச்சியைத் தக்கவைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அவர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.