“அரசு அலுவலகம் 4 நாள்… பள்ளிக்கு லீவு”: பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
இஸ்லாமாபாத்: ஏற்கனவே பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது ஈரான் – அமெரிக்கப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டில் நிலைகுலைந்து போயுள்ளது. இந்நெருக்கடியைச் சமாளிக்க அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் கேலிக்குள்ளாகி வருகின்றன.
பாகிஸ்தான் அரசின் ‘அதிரடி’ கட்டுப்பாடுகள்:
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் இதோ:
- வாகனங்களுக்குத் தடை: அடுத்த இரண்டு மாதங்களுக்கு 60% அரசு வாகனங்கள் இயக்கப்படாது. மீதமுள்ள வாகனங்களுக்கு எரிபொருள் பயன்பாடு 50% ஆகக் குறைக்கப்படும்.
- அரசு அலுவலகங்கள்: அரசு அலுவலகங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே செயல்படும்.
- பள்ளிகள் மூடல்: நாடு முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்குப் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பயணக் கட்டுப்பாடுகள்: அரசுத் தலைவர்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
“அப்புறம் எப்படி வாழ்வது?” – இணையவாசிகளின் கிண்டல்:
பாகிஸ்தான் அரசின் இந்த வினோதமான முடிவுகளைக் கண்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் வறுத்தெடுத்து வருகின்றனர்.
“பள்ளிகளை மூடிவிட்டீர்கள், அரசு அலுவலகங்களையும் மூடிவிட்டீர்கள், வாகனங்களையும் நிறுத்திவிட்டீர்கள்… அப்புறம் மக்கள் எப்படித்தான் வாழ்வது?”
என்ற வாசகம் எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. போதிய எரிவாயு இல்லாததால் மக்கள் அடுப்பு எரிக்கக் கூட வழியின்றித் தவிக்கும் நிலையில், தீர்வைத் தேடுவதை விடுத்து நாட்டை முடக்குவதிலேயே அரசு குறியாக இருப்பதாக அந்நாட்டு மக்களே விமர்சித்து வருகின்றனர்.
சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் அரசு, எரிபொருள் தட்டுப்பாட்டிற்காகப் பள்ளிகளையும் அலுவலகங்களையும் மூடுவது இதுவே முதல்முறை எனப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.