ஈரான் போர்: சீனாவின் ‘மௌன’ வியூகம் – அமெரிக்காவை வீழ்த்த இதுதான் சந்தர்ப்பமா?
மத்திய கிழக்கில் ஈரான் மீதான போர் 10 நாட்களைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக வல்லரசான சீனா காட்டி வரும் மௌனம் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போரால் சீனாவுக்கு ஏற்படப்போகும் லாப-நஷ்டங்கள் குறித்த சில அதிர வைக்கும் உண்மைகள் இதோ:
பொருளாதாரப் பிணைப்பு:
சீனா தனது கச்சா எண்ணெய் தேவையில் 55 சதவீதத்திற்கும் மேல் மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளது. இதில் 13 சதவீதம் ஈரானிடம் இருந்து கிடைக்கிறது. குறிப்பாக, ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. கடந்த 2021-ல் போடப்பட்ட 25 ஆண்டுகால ஒப்பந்தத்தின்படி, ஈரானின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பில் 400 பில்லியன் டாலர் முதலீடு செய்யச் சீனா உறுதியளித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை ஈரான் தாக்குப் பிடிக்கச் சீனா தான் முதுகெலும்பாக இருந்து வருகிறது.
இராணுவத் தொழில்நுட்ப உதவி:
ZTE போன்ற சீன நிறுவனங்கள் ஈரானின் கண்காணிப்பு அமைப்புகளுக்கு உதவியதோடு, சமீபத்தில் சீனா தயாரித்த சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கவும் ஈரான் முடிவு செய்திருந்தது. வெளிப்படையாக மறுத்தாலும், ஈரானுக்குத் தேவையான உளவுத் தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்களைச் சீனாவும் ரஷ்யாவும் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
தைவான் விவகாரமும் சீனாவின் கணக்கும்:
சீனாவின் இந்த மௌனத்திற்குப் பின்னால் ஒரு ராஜதந்திரக் கணக்கு உள்ளது. 2023 முதல் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்காக அமெரிக்கா சுமார் 50 பில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கா எவ்வளவு அதிகமாகப் பணத்தையும் இராணுவ பலத்தையும் செலவிடுகிறதோ, அவ்வளவு தூரம் தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் கவனம் குறையும் எனச் சீனா கருதுகிறது.
அதாவது, அமெரிக்காவை மத்திய கிழக்கில் சிக்க வைப்பதன் மூலம், தைவான் மீதான தனது பிடியை வலுப்படுத்தச் சீனா திட்டமிடுகிறது. இதனால் தான் மற்ற வளைகுடா நாடுகளை விட, தனது எரிசக்தித் தேவைக்கு முக்கிய நாடான ஈரான் மீதான தாக்குதலைச் சீனா வேடிக்கை பார்த்து வருகிறது.