சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: மதுரையில் ‘இயற்கை ராக்கெட் அடுப்பு’களுக்குக் குவியும் மவுசு!
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில், மதுரை மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர்களுக்கு மாற்றாக ‘இயற்கை ராக்கெட் அடுப்பு’களைப் பயன்படுத்துவதில் பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மதுரை வைகை தென்கரைச் சாலையில் அமைந்துள்ள இயற்கை அடுப்பு விற்பனை நிலையங்களில், இந்த ராக்கெட் அடுப்புகளை வாங்குவதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
சுமார் 18 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த அடுப்புகள், சாதாரண விறகு அடுப்புகளை விட 80 சதவீதம் குறைவாகவே புகையை வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் அடுப்புகளுடன் ஒப்பிடும்போது இவை மிகுந்த பாதுகாப்புடையவை என்றும், எரிபொருள் செலவை பெருமளவு குறைக்கும் என்பதால் வர்த்தக ரீதியாக இது லாபகரமானது என்றும் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் தவித்து வரும் மக்களுக்கு, இந்த ராக்கெட் அடுப்புகள் ஒரு சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன.