“ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது”: போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை!
ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதே வேளையில் ஈரானுக்கு மீண்டும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய நிலையில் ஈரானிடம் கடற்படை, விமானப்படை போன்ற தற்காப்பு அரண்கள் ஏதுமில்லை என்றும், அந்நாட்டின் தொலைத்தொடர்பு சாதனங்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஈரான் போரில் இருந்த மிகப்பெரிய ஆபத்து மூன்று நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டதாகத் தெரிவித்த டிரம்ப், தாக்குதல் தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். இருப்பினும், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தை ஈரான் தடுக்க முயன்றால், இதுவரை அவர்கள் சந்தித்ததை விட 20 மடங்கு அதிக வீரியத்துடன் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் என டிரம்ப் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.