“ஈரான் கடற்படைக்கு முற்றுப்புள்ளி”: அமெரிக்காவின் ‘மிட்நைட் ஹேமர்’ தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் அதிரடி!
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மிகப்பாரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஈரானின் 42 கடற்படைக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாகவும், இதில் பல பிரம்மாண்டமான கப்பல்களும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களின் மூலம் ஈரானின் கடற்படை பலம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை மட்டுமன்றி, ஈரானின் விமானப்படை மற்றும் ஒட்டுமொத்தத் தொலைத்தொடர்பு வசதிகளையும் அமெரிக்கா துண்டித்துள்ளதாக டிரம்ப் கூறினார். “அவர்கள் இனி எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வார்கள் என்று தெரியவில்லை, அவர்களே அதைக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும்” என அவர் கிண்டலாக விமர்சித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, அமெரிக்காவின் ‘மிட்நைட் ஹேமர்’ (Midnight Hammer) மற்றும் பி-2 (B-2) ரக போர் விமானங்கள் நடத்திய துல்லியமான தாக்குதல்கள் அந்தத் திட்டத்தை முற்றிலும் முறியடித்துள்ளன.
அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்துள்ளதாகவும், அதன் விளைவாகவே மேற்காசிய நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என ஈரான் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அமெரிக்காவின் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்று குறிப்பிட்ட அவர், “அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இன்னும் பல தலைகள் உருளும்” என எச்சரித்துள்ளார். உலகளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானாலும், ஈரானை அழிப்பதே தமது இலக்கு என்று டிரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.