கும்பகோணத்தில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: போதிய இடவசதியின்றி விவசாயிகள் தவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள், சேமிப்புக் கிடங்குகளுக்கு (குடோன்) கொண்டு செல்லப்படாமல் தேக்கமடைந்துள்ளன. நாச்சியார்கோவில், அழகாபுத்தூர், கிருஷ்ணாபுரம், திருநறையூர், தண்டந்தோட்டம் மற்றும் மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே மூட்டைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால், புதிதாக அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லைக் கொட்டி வைக்க இடமில்லாமல் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் மழையினால் சேதமடையும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி, தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகள் மூலம் குடோன்களுக்கு ஏற்றிச் செல்ல மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.