திமுக மாவட்டச் செயலாளர் மீது அதிருப்தி: சாதி ரீதியிலான அரசியல் செய்வதாகப் பரபரப்புப் புகார்!
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி மீது சாதி ரீதியிலான அரசியல் செய்வதாகக் கூறி பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதிகளை உள்ளடக்கிய இந்த மாவட்டச் செயலாளர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை மதிக்காமலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்காமலும் புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர் கட்சியில் தன்னிச்சையாகச் செயல்படுவதோடு, தனது சொந்த சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, குமாரபாளையம் தொகுதியில் மற்ற இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் அதிகளவில் இருந்தபோதிலும், வரவிருக்கும் தேர்தல்களில் தனது சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டுமே வேட்பாளராக வர வேண்டும் என்ற நோக்கில் அவர் காய் நகர்த்தி வருவதாகக் கட்சி வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தி கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் மாவட்ட திமுக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.