திருநள்ளாறு: நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆராதனை ஆரத்தி விழா – ஆளுநர் மற்றும் ஆதீனம் பங்கேற்பு!
காரைக்கால்: உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், வரும் மார்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, நளதீர்த்தக் குளத்தில் “சப்த நதிகள் ஆராதனை மற்றும் ஆரத்தி விழா” மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த விழாவின் தொடக்கமாக, நளதீர்த்தக் கரையில் ஸ்ரீ சொர்ண கணபதி ஹோமம் மற்றும் மஹா சங்கல்ப்ப பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, யானை மீது தங்கப் பூரண கும்பம் ஏற்றப்பட்டு, நளதீர்த்தக் குளத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. இந்த ஊர்வலத்தின் போது தருமை ஆதீன திருமுறை பாடசாலை மாணவர்களின் திருமுறை பாராயணம் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
நளதீர்த்தக் குளத்தில் நடைபெற்ற மஹா ஆரத்தி மற்றும் ஆராதனைப் பூஜையில், தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் ஆகியோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டனர். சனிப்பெயர்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தற்போது திருநள்ளாறில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.