தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம்: திமுக அரசைக் கண்டித்து மதுரையில் பாஜக இளைஞரணி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்!
மதுரை: தமிழகத்தில் பெருகிவரும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள திருவள்ளுவர் சிலை பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அபாயகரமான போதைப் பொருட்களின் புழக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். காவல்துறையினர் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களைக் கண்டுகொள்வதில்லை என்றும், இது குறித்துப் புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அவலநிலை நீடிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டை ஆள்வதற்குத் தகுதி இல்லாதவர் என்று கூறி, அவரது புகைப்படத்தைப் பாஜக நிர்வாகிகள் கிழித்து எறிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட என்.டி.ஏ கூட்டணி கட்சியின் இளைஞரணித் தொண்டர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.