அரசு ஊழியர்களின் வாக்கு திமுகவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆசிரியர் கூட்டணி தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை
தூத்துக்குடி: தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாகத் தெரிந்தாலும், அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி அந்தப் பலத்திற்குப் மிகப்பெரிய சேதாரத்தை (பாதிப்பை) ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட பின், அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்பதே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், செவிலியர்கள், சத்துணவு ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என அனைத்துப் பிரிவு அரசு ஊழியர்களும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிக்கு வந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.
அரசு ஊழியர்களின் இந்த ஏமாற்றமும் போராட்டங்களும் வரும் தேர்தலில் வாக்குகள் மூலம் தகுந்த பதிலடியாகப் பிரதிபலிக்கும் என்றும், இது ஆளுங்கட்சிக்குத் தேர்தல் களத்தில் பெரும் பின்னடைவைத் தரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.