சென்னை இளம்பெண்ணுக்கு பார்சலில் வந்த எலும்புக்கூடு: வியாசர்பாடியில் பெரும் பரபரப்பு!
சென்னை: சென்னை பாரிமுனையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவருக்கு, பார்சலில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி, ராஜாஜி தெருவைச் சேர்ந்த ஸ்ருதி என்பவர், பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் டூல்ஸ் கடையில் கடந்த 14 ஆண்டுகளாக கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று, கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த காவலாளியிடம் ஸ்ருதியின் பெயரிடப்பட்ட ஒரு பார்சலை ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார். தனக்கு எந்தப் பார்சலும் வர வாய்ப்பில்லை என்று ஸ்ருதி சந்தேகம் எழுப்பியதை அடுத்து, கடை உரிமையாளர் முன்னிலையில் அந்த பார்சல் பிரித்துப் பார்க்கப்பட்டது.
பார்சலைத் திறந்தபோது, அதனுள் மனித மண்டை ஓடு, எலும்புக்கூடு மற்றும் விபூதி இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பிளனேடு போலீஸார், அந்த எலும்புக்கூடு மற்றும் விபூதியைப் பறிமுதல் செய்தனர். இது ஏதேனும் செய்வினை தொடர்பான மர்மமா அல்லது யாராவது திட்டமிட்டு மிரட்டல் விடுக்கிறார்களா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.