சீர்காழி அருகே ஓடும் பேருந்தில் கழன்று ஓடிய சக்கரங்கள்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
சீர்காழி: சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீர்காழியை அடுத்த சேந்தங்குடி பகுதியை கடந்து சென்றபோது, பேருந்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதுடன், எதிர்பாராத விதமாக பின்சக்கரங்கள் கழன்று தனியாக ஓடின.
இதனால் பேருந்திற்குள் இருந்த பயணிகள் மரண பயத்தில் கூச்சலிட்டனர். எனினும், ஓட்டுநர் மிகுந்த சமயோசித புத்தியுடன் செயல்பட்டு, பேருந்தை லாவகமாக கட்டுப்படுத்தி நிறுத்தினார். ஓட்டுநரின் இந்த சாதுர்யமான செயலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு, பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து அதிருப்தி வெளியிட்ட பயணிகள், திமுக அரசின் அலட்சியத்தால் அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினர். காலாவதியான மற்றும் மோசமான நிலையில் உள்ள பேருந்துகளை இயக்குவதால் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், போக்குவரத்துத் துறை உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.