“ALL FAIL” திமுக அரசு… ரிப்போர்ட் கார்டு வெளியிட்ட பாரதிய ஜனதா கட்சி
தேர்தலுக்கு முன் திராவிட முன்னேற்ற கழகம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, தமிழக பாஜக விரிவான “ரிப்போர்ட் கார்டு” ஒன்றை வெளியிட்டுள்ளது. துறைவாரியாக திமுக அரசின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் 75% அல்லது 80% வரை நிறைவேற்றியதாக அமைச்சர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தனர். ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக கூறியிருந்தார். கல்வி, விவசாயக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், திமுக ஆட்சியின் “மதிப்பெண் அட்டை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மொத்த வாக்குறுதிகளில் 31% மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், பெரும்பாலான துறைகளில் அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆட்சி மற்றும் நிர்வாகம், உட்கட்டமைப்பு, சமூக நீதி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறைபாடுகள் உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சட்டம்-ஒழுங்கு, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், மத நல்லிணக்கம், சமூகநீதி, ஊழல் ஆகிய 10 பிரிவுகளில் 9 பிரிவுகளில் அரசு தோல்வியடைந்துள்ளதாகவும், “ஊழல்” என்ற ஒரு பிரிவில் மட்டும் ‘வெற்றி’ பெற்றதாகவும் பாஜக அறிக்கையில் விமர்சனம் இடம்பெற்றுள்ளது.
மாநில சுயாட்சி குறித்து குழு அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக அரசு, தன்னுடைய முதல் தேர்தல் வாக்குறுதியான மாநில உரிமைகள் பாதுகாப்பில் கூட உறுதியான நிலைப்பாடு எடுத்ததாக தெரியவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலுக்கு முன் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் மூலம் மக்களை கவர்ந்த திமுக, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மீண்டும் வாக்குறுதிகள் தயாரித்து வருவதாகவும், இந்த சூழலில் பாஜக வெளியிட்டுள்ள ரிப்போர்ட் கார்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.