“ஆளுங்கட்சிக்கு ஆதரவாகக் காவல்துறை”: மதுரையில் பாஜக மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி ஆவேசப் பேச்சு!
மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள பாவலர் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மதுரை மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி, தமிழக காவல்துறை மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். பாஜக சார்பில் நடத்தப்படும் தெருமுனை கூட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்குக் காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதாகவும், அவர்கள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.