தமிழக மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த ரூ.1658 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு ரூ.1658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம், இதுதொடர்பான விவரங்களை புள்ளிவிவரங்களுடன் தாக்கல் செய்துள்ளது.
அதன்படி, சாகர்மாலா திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்திற்கு ரூ.113 கோடி, குந்துகால் மீன்பிடி இறங்கு தளத்திற்கு ரூ.74 கோடி உட்பட 4 முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் மீன்பிடித் தொழிலை நவீனமயமாக்கும் நோக்கில் தேங்காய்ப்பட்டினம் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.253 கோடி, விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் துறைமுகத்திற்கு ரூ.235 கோடி, சென்னை மீன்பிடித் துறைமுக நவீனமயமாக்கலுக்கு ரூ.97 கோடி என, 11 மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் 26 மீன்பிடி இறங்கு தளங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், பாம்பன் சிறு துறைமுகத்தில் தூர்வாருதல் மற்றும் ராமேஸ்வரம் சிறு துறைமுகத்தில் பயணிகள் முனையம் அமைக்கும் திட்டங்களுக்கு தமிழக அரசு இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என்றும், இதன் காரணமாகவே சாகர்மாலா திட்டத்தின் கீழ் இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.