ரூ.5,000 உரிமைத் தொகை திருப்பி அனுப்பு: சமூக ஆர்வலரின் நடவடிக்கை கவனம் ஈர்ப்பு
மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வழங்கப்பட்ட ரூ.5,000 மகளிர் உரிமைத் தொகையை, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மணியார்டர் மூலம் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 வழங்கப்பட்டது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன், தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட தொகையை ஏற்க மறுத்து, மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து அந்தத் தொகையை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மொத்த கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ளதாகவும், பல மக்கள் நலத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க அரசு சிரமப்படும் சூழலில், தேர்தலை முன்னிட்டு பணம் வழங்குவது சரியான நடைமுறை அல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிதி உதவி மகளிர் உரிமைத் திட்டமாக அல்லாமல், தேர்தல் காலத்தில் வழங்கப்படும் சலுகை எனப் பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.