உப்பிலியாபுரம் BDO மீண்டும் சஸ்பெண்ட் – மூன்றாவது முறை ஒழுங்கு நடவடிக்கை
உயரதிகாரிகளுடன் ஒத்துழைக்காதது மற்றும் அலட்சியம் குறித்த குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டத்தில் உயரதிகாரிகளுடன் ஒத்துழைக்காமல், பணியில் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உப்பிலியாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) செந்தில் குமார் மூன்றாவது முறையாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உப்பிலியாபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில் BDO செந்தில் குமார் கலந்துகொள்ளவில்லை என்றும், அச்சமயம் அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாகவும், அரசுப் பள்ளிக்கு விடுமுறை வழங்கிய விவகாரம் மற்றும் நிர்வாக பணிகளில் அலட்சியம் காட்டிய குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட காரணங்களால், செந்தில் குமார் மீது இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.