“ஆன்லைன் அபராதம் செல்லாது” – கோவையில் போக்குவரத்து காவலர் நடத்தை குறித்த வீடியோ வைரல்
அபராதம் இயந்திரம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என கூறியதாக குற்றச்சாட்டு
கோவை நகரில் ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்த அனுமதிக்காமல், தங்களிடம் உள்ள இயந்திரம் மூலமே கட்டணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படும் போக்குவரத்து காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையின் போது, சரக்கு ஆட்டோவில் தனது குடும்பத்தினரை அழைத்துச் சென்ற ஓட்டுநரை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை ஆன்லைன் வழியாக செலுத்தத் தயாராக இருப்பதாக ஓட்டுநர் தெரிவித்தபோது, ஆன்லைன் கட்டணம் ஏற்கப்படாது, காவல்துறையினர் வைத்திருந்த இயந்திரம் மூலமே அபராதம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து காவலர் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.