சேலத்தில் 5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேர மது விற்பனை? – பொதுமக்கள் புகார்
கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு; விசாரணை கோரிக்கை
சேலம் மாநகரில் உள்ள ஐந்து டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக வெளியான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்தழகு என்ற நபர், புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஐந்து டாஸ்மாக் கடைகளில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெயரில் பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த பார்களில் விதிமுறைகளை மீறி முழு நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.