அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன்
அதிமுகவுடன் கூட்டணி இருந்தாலும், ஆட்சியில் பங்கு கேட்க பாஜக முன்வராது என்று அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வடவள்ளி பகுதியில் பாஜக ஏற்பாடு செய்த ‘மோடி முகாம்’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று உரையாற்றினார். இதில் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாகவும், அதற்கு திமுக மறுப்பு தெரிவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு மாறாக, பாஜக அதிமுகவிடம் அமைச்சரவைப் பொறுப்பு அல்லது ஆட்சிப் பங்கு கோராது என அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், திமுகவில் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்தும் வகையில் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார்.