“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி
கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் மக்கள் சேவையில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்தால், அதை எவ்வாறு சதி எனக் கருதலாம் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆட்சியில் பங்கு” என்ற கருத்து தமிழக அரசியல் சூழலுக்கு பொருந்தாது என்றும், அது அவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது.
இதன் பின்னணியில் திமுக–காங்கிரஸ் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாக பேசப்படுகிறது.
இந்த சூழலில், தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில், “தோழமைக் கட்சியாக இருந்து மக்கள் நலப் பணிகளில் பங்கு கேட்டால் அது எப்படிச் சதியாகும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமா, அல்லது ஒரே கட்சி ஆட்சி தொடர வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்” என அவர் முன்பே பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.