“கேரளாவிலும் திராவிட மாடலா?” – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
அண்டை மாநிலமான கேரளத்திலும் திமுக தொடர்புடையவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் திமுக மாணவர் அணி செயலாளராக உள்ள ரமேஷ், கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டில் 55 பவுன் நகை திருடிய வழக்கில் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த ரமேஷ் நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கிரகாம் பெல்லின் உதவியாளராகவும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள கே.என். நேருவுக்கு நெருக்கமானவராகவும் அறியப்படுபவர் என அவர் கூறியுள்ளார்.
“தமிழகத்திலேயே அல்லாமல், கேரளத்திலும் திமுகவினர் செயல்படுகிறார்களா? இன்னும் எத்தனை மாநிலங்களில் ‘திராவிட மாடல்’ இவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது கேரள காவல்துறையின் விசாரணையில் வெளிவரும்” என அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.