அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு – கன்யாகுமரி முக்கடலில் ஒருநாள் கடையடைப்பு
அறநிலையத்துறையின் நடவடிக்கையை கண்டித்து, கன்யாகுமரி முக்கடல் சுற்றுலா தலம் முழுவதும் வியாபாரிகள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை கருத்தில் கொண்டு கடற்கரை மற்றும் பகவதி அம்மன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
பகவதி அம்மன் கோயில் சன்னதி தெருவில் ஆக்கிரமிப்பில் உள்ள 12 கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகற்றப்படும் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்பதே தங்களின் முக்கிய கோரிக்கையாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா தளத்தில் பரபரப்பு நிலவியது.