‘Four Stars of Destiny’ விவகாரம்: முதல் முறையாக விளக்கம் அளித்த முன்னாள் ராணுவ தளபதி நரவானே
தான் எழுதிய ‘Four Stars of Destiny’ என்ற புத்தகத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை குறித்து முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத இந்தப் புத்தகத்தை குறிப்பிட்டு, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்திருந்தார். இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ வெளியீடு இல்லாத நிலையில், புத்தகத்தின் சில பகுதிகள் சமூக வலைதளங்களில் பரவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் புத்தகத்தின் பதிப்பு உரிமையை பெற்றுள்ள பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம், “புத்தகம் இன்னும் அச்சிடப்படவோ அல்லது டிஜிட்டல் வடிவில் வெளியிடப்படவோ இல்லை. அச்சு, PDF அல்லது பிற டிஜிட்டல் வடிவங்களில் பரவி வரும் பிரதிகள் அனைத்தும் காப்புரிமை மீறலாகும்; அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” என்று முன்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இதுவரை அமைதியாக இருந்த நரவானே, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில், புத்தகத்தின் நிலை குறித்து பென்குயின் நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தை மறுபதிவு செய்துள்ளார். இதன் மூலம் புத்தகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதையும், அனுமதியற்ற பிரதிகள் சட்டவிரோதமானவை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.