சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு: அமெரிக்கா–ஆர்மீனியா ஒப்பந்தம்
ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஆர்மீனியா, தற்போது அமெரிக்காவுடன் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
“123 ஒப்பந்தம்” என அழைக்கப்படும் இந்த உடன்படிக்கை, அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பம், எரிபொருள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை ஆர்மீனியாவிற்கு சட்டரீதியாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆரம்ப கட்டமாக சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகள் நடைபெறும் என்றும், தொடர்ந்து 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நீண்டகால பராமரிப்பு மற்றும் எரிபொருள் விநியோக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுவரை அணுசக்தி துறையில் ரஷ்யா மற்றும் ஈரான் மீது சார்ந்திருந்த ஆர்மீனியா, புதிய அணு உலை அமைப்பதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.