அமெரிக்கா–வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தம்: பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள்
இந்தியாவுடன் இடைக்கால வர்த்தக புரிந்துணர்வு ஏற்பட்டதையடுத்து, அமெரிக்கா வங்கதேசத்துடனும் தனி வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் தாக்கங்களைப் பார்க்கலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேசத்திலிருந்து வரும் சில பொருட்களுக்கு 37% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் அது 20% ஆகக் குறைக்கப்பட்டது. இதேபோல், இந்தியாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான 50% வரி 18% ஆகக் குறைக்கப்பட்டு, இருநாடுகளுக்கும் இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், சுமார் ஒன்பது மாத கலந்துரையாடல்களுக்கு பின், வங்கதேசத்துக்கான வரியில் குறைந்தளவு தளர்வு அளிக்கப்பட்டதுடன், அமெரிக்கா–வங்கதேசம் இடையே புதிய வர்த்தக உடன்பாடு உருவாகியுள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
- அமெரிக்க வேளாண் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளுக்கு வங்கதேச சந்தை திறக்கப்பட்டுள்ளது.
- சோயாபீன், பால்வருட்பொருட்கள், மாட்டிறைச்சி, கோழி, பருப்பு வகைகள், பழங்கள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு அனுமதி.
- மருத்துவ உபகரணங்கள், ரசாயனங்கள், வாகனங்கள் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் போன்ற தொழில்துறை தயாரிப்புகளுக்கும் அனுமதி.
- அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வழங்கும் சான்றிதழ்களை அங்கீகரிப்பு.
- மறுசீரமைக்கப்பட்ட (remanufactured) அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி தடைகள் நீக்கம்.
- வாகன உமிழ்வு மற்றும் பாதுகாப்பு தரநிலைகளில் அமெரிக்க தரத்தை ஏற்றுக்கொள்வது.
- 14 போயிங் விமானங்களை வாங்க வங்கதேசம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜவுளித் துறைக்கு சலுகை
இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக, அமெரிக்க பருத்தி மற்றும் செயற்கை நார்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வங்கதேச ஆடைகள் மற்றும் ஜவுளிப் பொருட்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய ஆடை உற்பத்தியாளராக விளங்கும் வங்கதேசத்தில் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் ஜவுளித் துறையில் பணியாற்றுகின்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தத் துறையின் பங்கு சுமார் 10% ஆகும். எனவே, இந்த ஒப்பந்தம் அந்தத் துறைக்கு ஆதாயம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பீட்டு நிலை
- பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு 19% வரி
- இந்தியாவுக்கு 18% வரி
அமெரிக்க மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வங்கதேச ஜவுளிக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜவுளி தயாரிப்புகளுக்கு 18% வரி தொடர்கிறது.
அமெரிக்க விவசாய மற்றும் தொழில்துறை பொருட்களுக்கு இந்தியா வரையறுக்கப்பட்ட அணுகுமுறையை கடைப்பிடித்து வரும் நிலையில், வங்கதேசம் விரிவான சந்தை அணுகலை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் பிராந்திய வர்த்தக சமநிலையிலும், தெற்காசிய பொருளாதார போட்டியிலும் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக உள்ளது.