அகில இந்திய வேலைநிறுத்தம்: பங்கேற்றால் கடும் ஒழுங்கு நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை
தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள் கலந்து கொள்ளாமல், வழக்கம்போல் பணியில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினத்திற்கான அனைத்து வகை விடுப்புகளும் ரத்து செய்யப்படுவதாகவும், வாராந்திர விடுமுறை மற்றும் ஓய்வுநாளில் உள்ள பணியாளர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தை முன்னிட்டு பணியில் கலந்துகொள்ளாதவர்களுக்கு, நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மற்றவர்களை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்கள்மீதும் கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலாண்மை தரப்பு தெரிவித்துள்ளது.