கல்வான் சம்பவத்துக்கு பின்னர் அணு சோதனை குறித்த சர்ச்சை

Date:

கல்வான் சம்பவத்துக்கு பின்னர் அணு சோதனை குறித்த சர்ச்சை

2020ஆம் ஆண்டு சீனா மறைமுகமாக பல அணுசக்தி பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், அணு சோதனைத் தடை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளை மீறும் செயல்பாடுகளை மறைத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யா–அமெரிக்கா இடையிலான “நியூ ஸ்டார்ட்” அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலாவதியான சூழலில், அதை நீட்டிக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் முன்மொழிவை அமெரிக்கா ஏற்கவில்லை. அதேவேளை, இந்த ஒப்பந்தத்தில் சீனாவையும் சேர்க்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா ஆயுதக் குறைப்பு மாநாட்டில் அமெரிக்காவின் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் உலகளாவிய பாதுகாப்பு பிரிவு துணைச் செயலாளர் தாமஸ் டினானோ, சீனா இரகசியமாக அணு ஆயுத பரிசோதனைகள் நடத்தியதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பதிவில், 2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் இந்தியா–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கல்வான் மோதலுக்கு ஒரு வாரம் கழித்து சீனா அணு பரிசோதனை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய எல்லைக்கு அருகிலுள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் லாப் நூர் மையத்தில், நில அதிர்வுகளை மறைக்கும் “டிகப்பிளிங்” தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிக சக்தி கொண்ட அணு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சீனாவின் அணு ஆயுதக் குறைப்பு தொடர்பான தூதர் ஷென் ஜியான், சீனாவை அணு அச்சுறுத்தலாக சித்தரிக்க அமெரிக்கா முயற்சித்து வருவதாகவும், இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீனா தெளிவாக மறுக்கிறது என்றும் கூறினார். உலகளாவிய அணு ஆயுதப் போட்டி தீவிரமடைவதற்கு அமெரிக்காதான் காரணம் என்றும் அவர் சாடினார்.

அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் பேச்சாளர், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்து, அணு சோதனைத் தடை ஒப்பந்த விதிமுறைகளை சீனா மதித்து வருகிறது என தெரிவித்தார்.

அணு சோதனைத் தடை ஒப்பந்த அமைப்பின் நிர்வாகச் செயலாளர் ராபர்ட் ஃபிலாய்ட், சீனா அணு சோதனை நடத்தியதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என விளக்கம் அளித்தார்.

இதேவேளை, ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டேரில் கிம்பால், சீனா மறைமுகமாக சோதனை நடத்தியிருக்க வாய்ப்பு இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட சர்வதேச ஆயுதக் கட்டுப்பாட்டு அறிக்கையிலும், இந்த ஆண்டு பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த சீன இராணுவ வளர்ச்சி தொடர்பான அறிக்கையிலும், சீனா அணு சோதனை நடத்தியதாக எந்த குறிப்பும் இடம்பெறவில்லை.

தற்போது சீனாவிடம் சுமார் 600 அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அது 1500 ஆக அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் 5,500-க்கும் அதிகமான அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 5,044 அணு ஆயுதங்களும் இருப்பதாக அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆயுதப் போட்டியை கட்டுப்படுத்த வேண்டும் என மூன்று நாடுகளும் வெளிப்படையாகக் கூறிவந்தாலும், அவற்றின் நடைமுறை நடவடிக்கைகள் அதனை பிரதிபலிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுகின்றன.

இந்நிலையில், புதிய அணுசக்தி கட்டுப்பாட்டு ஒப்பந்தம் விரைவில் உருவாகுமா என்ற கேள்வி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் கூட்டணி இருந்தாலும்,...

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா மகா கும்பமேளா நிகழ்வின்...

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு...

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம்

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம் இந்தியா–அமெரிக்கா...