அரசு நிலத்தை போலி ஆவணங்களால் விற்பனை செய்ய முயன்ற விசிக நிர்வாகி கைது
தென்காசியில் அரசு சொந்தமான நிலத்தை கள்ள ஆவணங்கள் மூலம் பதிவு செய்து விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் விசிக துணைச் செயலாளராக செயல்பட்டு வந்த ரீகன் குமார், ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் உள்ள அரசு நிலத்தை போலியான பத்திரங்கள் தயாரித்து தனியார் சொத்தாக காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த நிலத்தை பலருக்கு விற்பனை செய்வதாக கூறி, பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், ரீகன் குமாரை கைது செய்தனர்.
மேலும், அவருக்கு எதிராக ஏற்கனவே 18 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.