முதல்வரை சந்திக்க தடையாக காவல்துறை – மதுரை திமுக முன்னாள் தலைவர் புகார்
முதலமைச்சரை நேரில் சந்தித்து தன் பிரச்சினைகளை எடுத்துரைக்க முயன்றபோது, காவல்துறையினர் தொடர்ந்து தடை ஏற்படுத்துவதாக மதுரை மண்டல திமுக முன்னாள் தலைவர் வி.கே.குருசாமி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், 2011ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தனது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் மரணமடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், காவல்துறையினர் தன் மீது அடுக்கடுக்காக பொய்யான வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும், அதனால் நீதிமன்றத்தின் பாதுகாப்பு உத்தரவுடன் வீட்டிலேயே தங்கியிருப்பதாகவும் கூறினார்.
அதேபோல், சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியின் மகனை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.