கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன் – இருவர் காயம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், புனிதநீர் தெளிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரோன் திடீரென கீழே விழுந்ததில் இரண்டு பக்தர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாலாட்டின்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீகரியமால் அழகர் கோயிலில் கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததையடுத்து, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ட்ரோன், கூட்டமாக நின்றிருந்த பக்தர்களின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் தேனி மாவட்டம் காமராஜபுரத்தைச் சேர்ந்த தம்பதி இருவர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.