மாணவர் ஸ்டார்டப் முயற்சிகளுக்கு ரூ.1000 கோடி வரை முதலீடு
மாணவர்கள் தொடங்கும் ஸ்டார்டப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைந்து ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான முதலீட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐஐடி வளாகத்தில் தொழில் முனைவோர்களுக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் Ather நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காமகோடி, மாநாட்டின் மூலம் மாணவர்கள் தங்களது தொழில் யோசனைகள் மற்றும் ஸ்டார்டப் முயற்சிகளை முன்வைக்கலாம் என்றும், அவற்றிற்கு 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை முதலீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ‘யூனிகார்ன் இந்தியா’ நிறுவனத்துடன் இணைந்து இந்த முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், மாணவர்களின் திறமை மற்றும் புதுமை எண்ணங்களை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.