குடிநீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில், உரிய வாசகங்களை பாட்டில்களில் கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடிநீர் பாட்டில்களில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மைக்ரோ பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆய்வில், பரிசோதனை செய்யப்பட்ட பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதியாக கண்டறியப்பட்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனை கருத்தில் கொண்டு, குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை தெளிவாக அச்சிடும் வகையில், மத்திய அரசு உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.