போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள போதமலை பகுதிக்கு அமைக்கப்படும் சாலைப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரமாக திறப்பு விழா நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராசிபுரத்தை அடுத்த போதமலையில் கெடமலை, கீழூர், மேலூர் என மூன்று கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் தற்போது வரை சாலைப் பணிகள் சுமார் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 40 சதவீத பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், முழுமையடையாத போதமலை சாலையை முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் காலம் நெருங்கி வருவதாலும், கல்வெட்டில் பெயர் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தாலும், திமுக அரசு அவசர அவசரமாக சாலையை திறந்து வைத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.